Tuesday, November 22, 2022

DR.SIDHESWARAMURTHI-BT-PUMS-BommanayakkanPalayam-GobichettiPalayam-ERODE

 

நானும் கல்வி  வலையொலியும்
இணையவழிக் கல்விவானொலி [வலையொலி]
Online KalviRadio
www.kalviradio.com

-         முனைவர் க.சு. சித்தேஸ்வர மூர்த்தி

மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருந்த காலம் 2019 ன் கடைசி மாதமும் அதன் தொடர்ச்சியும் பணக்கார நாடானாலும்  ஏழை நாடாக இருந்தாலும் இருண்ட முகமாகவே தென்பட்டது. கல்விக்கூடங்கள் மூடப்பட்டன, கலை கலாச்சாரமையங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து முடக்கப்பட்டன. பூமி சுற்றிக் கொண்டு தான் இருந்தது இரண்டரை ஆண்டுகாலம் கவச உடையில் மனிதக் கூட்டம்.

வேதனை எதிர்கால தூண்களின் உற்பத்தி மையம் முற்றிலும் மூடப்பட்டது. மூளைசுருங்கிப் போய்க் கொண்டிருந்தன. சிற்பிகள் என்னென்ன வழிகள் உண்டோ அவைகளை பின்பற்றத் தொடங்கினர். குறைந்த பட்சம் செதுக்கப்பட்ட அளவில் நிலைத்திருக்கவாவது பாடுபட்டனர். அப்போது கடலூரில் புவனகிரியில் கற்றாலை என்ற  சிறு தொழிற்சாலையில் ஒரு பெரும் கருவி மிக நன்கு செயல்பட வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.


ONLINE KALVI RADIO www.kalviradio.com கல்வி வலையொலி என்ற பெயரில் எனது பகுதி ஆசிரிய சகோதரிகள் திருமதி ஜெயந்தி, திருமதி உமா இருவரும் இதில் நீங்கள் சேர்ந்து சேவைப் பணியாற்ற வேண்டும் என அன்புக் கட்டளை விதைத்தார்கள். நானும் முற்றிலும் மாணவர் மேன்மைக்காக இலவசமாகத்தான் இயங்குகிறது என்பது உறுதியானால் நான் தயார் என்றேன். இதன் மேலாண் இயக்குநர்  தன்னார்வளர் திரு.கார்த்திக் ராஜா அவர்களிடம் எனது அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெளிவடைந்து கொண்டேன்.

பிற கென்ன….ஒரே மகிழ்ச்சி. பாடம் தயாரிப்பு, உயர்கல்வி நெறிப்படுத்தல்  தயாரிப்பு என என்னை வேகப்படுத்திக்கொண்டேன். வேலையை செம்மைப் படுத்திக் கொண்டேன். வீட்டை விட்டு உடல்தான் எங்கும் செல்ல வில்லையே தவிர மனம் மாணவர்களைப் படம் பிடித்தது. ஒவ்வொரு மாணவ பயிர்களையும் மனதிற்குள்ளேயே தட்டிக் கொடுத்துக்கொண்டேன். எனது மாணவ மாணவியர்களை மட்டுமே மையப்படுத்தி வருவதில்லை இந்த ஒலி அலைகள் கடற்கரையோரத்து நாணல்களையும் தடவும் சமவெளிப்பகுதி  தென்னையையும் தொடும் மலைப்பகுதி மூங்கில் களையும் கழுவச் செல்லும் என புரிந்து கொண்டு. அதற்கேற்ப நிலையான அதேசமயம் வட்டார மொழிகளை அதிகம் பயன்படுத்தாமல் பொதுவான தமிழ் விளக்கம் மொழிகளைக் கொண்டு  பாடத்தயாரிப்பைத் தொடங்கினேன்.

எதற்கும் மாதிரியாக ஒரு பாடம் ஏழாம் வகுப்பில் தாவர உலகத்தை விளக்கமாக ஒருமணி நேரம் எடுத்து அனுப்பிவைத்தேன். அதற்கு முன்பாக யூடூப் சேனலில் பாடம் எடுத்ததால் ஆடியோ மட்டும் எடுத்து அனுப்புவதில் பெரிய சிரமம் ஏற்படவில்லை ஆயினும் மாணவர்கள் முன் இருப்பது போலவே கற்பனை மனோபாவத்தில் இருந்து பாடம் எடுக்க வேண்டும் என்பதும். கேட்பவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியாமலேயே புரிந்திருப்பார்கள் என்ற  பொய்யான நம்பிக்கையை நான்  ஏற்றுக் கொள்ளவில்லை  அறிவியல் பாடமும் அப்படிப்பட்டதல்ல அதனால் நடத்தியவைகளை Recap செய்யும் போது மீண்டும் நடத்துவது போலவே ஆங்கில வழி மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் ஆரம்பத்தில் எடுத்து கொடுத்தேன்.

 இதனை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். நமது www.kalviradio.com என்பது சிலருக்கு மட்டும் பயன்பட ஏதுவாக இருக்கக் கூடாது LKG தொடங்கி 5 ஆம் வகுப்பு வரையிலும் பிறகு எட்டாம் வகுப்பு வரையிலும் பிறகு மாணவர்கள் பயன் பெற்று வரும் நிலை கண்டு மகிழ்ந்து பத்தாம் வகுப்பு வரையிலும் நீடிக்கலாம் என்று நண்பர் கார்த்திக் ராஜா கூறினார்கள் அப்போது அரசின் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதில் வருவதால் நமக்கு அரசின் அனுமதியும் தேவைப்படும் எனக்கருதி.

 அப்போதைய கல்வி அமைச்சர் மாண்புமிகு கே..செங்கோட்டையன் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்து விளக்கிக் கூறினோம். மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இப்போதே உங்களுக்கு வாழ்த்துச் செய்தியும் தருகிறேன் என வீடியோ, ஆடியோ வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

வகுப்பெடுக்கும் தன்னார்வ அரசு ஆசிரியர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அரசின் முழு அங்கீகாரம் கிடைத்து விட்டது கண்டு மகிழ்ந்து  தமிழ் வழி, ஆங்கில வழி என தனியாகப் பிரித்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கால அட்டவணை வகுத்து திட்டமிடப்பட்டது.

 ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய ஒரு பணியை என்பது ஆசிரியர்கள் ஓரணியில் திரண்டு லட்சக்கணக்கான மாணவர்களை கல்வி வலையொலியை கேட்க வைத்தோம். வீட்டிலேயே, எந்த ஒரு பயமுமின்றி சாதாரணப் ஸ்மார்ட் போனிலேயே, மிகக்குறைந்த டேட்டாவில், செலவே இல்லாமல்  எளிமையாக செயல்படும் ஆற்றாலால்  தமிழகம் முழுவது கல்வித் தொலைக்காட்சி போலவே அரசு பள்ளித் தன்னார்வ ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி நடை போட்டது.

இது எந்த அளவிற்கு மாணவர்களைச் சென்று சேர்கிறது என்பதை ஆய்வு செய்யலாம் என்று என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. திரு கார்த்திக் ராஜா அவர்களுடைய அனுமதியின் பெயரில் ஈரோடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி  நிறுனத்தின் மூலமாக SCERT க்கு ஒப்படைக்கும் விதமாக ஆய்வைத் தொடங்கினேன். ஆறு மாத கால தொடர் ஆய்வு இது. கடுமையான பணியாகத் தான் தோன்றியது இரண்டு ஆண்டுகால M.Phil படிப்பை 6 மாத காலத்தில் முடிப்பது போன்று  அமைந்தது தளரவில்லை. எனது நெறியாளர்கள் விரிவுரையாளர் Dr.அன்புராஜ் முதல்வர் Dr.லட்சுமி நரசிம்மன் என்னை தளரவிடவில்லை கல்வி ரேடியோ தலைமை ஒருங்கிணைப்பாளர் என்னைத் தூங்க விடவில்லை ஆய்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் எடைப் போட்டார்.

 ஆய்வின் முடிவுகள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தன. கல்வி ரேடியோ கேட்ட மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மற்ற மாணவர்களை 27% அதிகம் என கிடைத்தது. கல்வி ரேடியோ கேட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 45% அதிகரித்தது என்ற முடிவும் கிடைத்தது. எல்லா மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க என்ன செய்யலாம் என்ற திட்டமிடலில் இறங்கினோம்.

 ஆய்வு முடிவுகளை  DPI வளாகம் வரை கொண்டு சென்றோம் ஆட்சிகள் மாறின, சமூகத்தில் காட்சிகள் மாறின கொரணாவும் மக்களிடமிருந்து இரண்டாண்டு கோரத் தாண்டவத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுக்கத் தொடங்கியது. இந்தியாவில் கோடிக்கணக்கான பேரை திக்குமுக்காட வைத்த பின் முழுமையாக விடை பெற அப்பெருந்தொற்றுக்கு மனமில்லை.

ஆன்லைன் கல்வி ரேடியோவின் தலைமை கொடுத்தனுப்பிய தகுதியான மாணவர்கள் அதிக நேரம் www.kalviradio.com பார்த்து பயன் பெற்ற மாணவ கண்மணிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் 2021 ஜீன்மாதம் வழங்கிச்சிறப்பு செய்தோம். பொதுமக்களுக்கும் இந்த இணையத் தளம் தெரிய வேண்டும் என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் முன்பாக ஜனவரி 26 .2021 குடியரசு தினத்தன்று விளக்கமளிக்கப் பட்டது.இதன் செயல்திறன் கண்டு பெரும் பான்மையான பெற்றோர்கள் பிரமிப்பயைந்து போனார்கள்.

இணையத்தில் தொகுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் பயன் படுத்தும் வகையில் உள்ள playlist ஐ பயன்படுத்தும் மாணவர்களுக்கு பேனா,பென்சில் மற்றும் பல பரிசுப் பொருட்கள் கொடுத்து வருகின்றோம்.

கடலோரம் தோன்றிய ஆன்லைன் கல்வி வலையொலி கழனி கடந்து, கயல் கடந்து, காடு கடந்து கல்வியை சுமந்து வந்து மாணவர்கள் காதுகளில் தெளிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.

 

கல்வித்துறையும் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்து உள்ளன. ITK இதனையும் கல்வி வலையொலி www.kalviradio.com எளிமைப் படுத்திக் கொண்டு சேர்த்தது. எண்ணும் எழுத்து என ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அதனையும் எளிமைப்படுத்தி கல்வி வலையொலி செயல்படுத்தி வருகிறது.

இதில் உழைத்த பல ஆசிரியர்கள்  நல்லாசிரியர் விருதுகளைப் பெற்றனர் ரோட்டரி, லைன்ஸ்,  என பாராட்டாத தன்னார்வ அமைப்பே இல்லை எனலாம்.

 இதில் எட்டாம் வகுப்பு அறிவியல் பாடங்களை  நான் எடுத்து நடத்தினேன். மிகச்சிறப்பான அனுபவங்கள். உயர்கல்விக்கு மாணவர்கள் செல்லும் போது ஏற்படும் குழப்பம், மன அழுத்தம் திண்டாட்டம் இவைகளைத் தீர்க்கும் விதம் 10 மணி நேர வகுப்புகள் எடுத்து அனுப்பி ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

 கண்மணிகள் நேரம்  என்று ஏற்படுத்தி ஒருவழிப்பாதை நிகழ்வை இருவழிப் பாதையாக மாற்றி போற்றிப் புகழ்ந்து மாணவர்களின்  திறனை ஆராய்ந்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு பரிசு மழைகளையும் சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்கி தன் பணியை இமயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது விளைவு.

 நமது மாநிலத்தின் தலைமைச் செயலர் மேன்மைமிகு இறையன்பு IAS  அவர்கள் பாராட்டு மடல் வழங்கிச் சிறப்பித்தார்கள். இதில் ஈடுபட்டுள்ள அத்தனை அரசுப் பள்ளி தன்னார்வ ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.

 ஒரு தனிமனிதனின் நல்ல எண்ணம் உள்ளம் நலமான பாதையில் பயணிக்கும் போது அத்தனை நல்ல பயணிகளும் இணைந்து எல்லாப் பாதையிலும் பயணித்து செதுக்கி விடப்பட்ட சிற்பங்கள் மேலும் சிதையாமல் மாறாக மேலும் மெருகூட்டி தமிழக கல்வித்தேரை விடம் பிடித்து. இழுத்த முயற்சியோடு இன்றும் சென்று சேரவேண்டியது நெடுந்தொலைவு என்ற எதிர்பார்ப்போடு ...

 முனைவர் க.சு.சித்தேஸ்வரமூர்த்தி

 ஆசிரியர், எழுத்தாளர்,

 சுற்றுச்சூழல் ஆய்வாளார்.

கோபிசெட்டிபாளையம்.