Sunday, October 9, 2022

Tr.A.R.Thailambal-PUMS-Vadakkipalayam-Pollachi-North-Coimbatore-District


ஆ.ரா.தைலாம்பாள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்கு பாளையம்,
பொள்ளாச்சி வடக்கு கோயம்புத்தூர் மாவட்டம்.

ஆசிரியர் அனுபவங்கள்....

 ஆன்லைன் கல்வி ரேடியோ கல்வி ரேடியோ www.kalvi radio.com அறிமுகம் கிடைத்தது பற்றி...

 கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் ஒன்றியத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மூலம் நாளிதழ் செய்திகளின் வாயிலாக கல்வி ரேடியோ பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. எங்கள் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை எம். ஸ்ரீதேவி மூலம் கல்வி வலையொலி பற்றி அறிந்தேன். 

2. கொரோனா ஊரடங்கு காலத்தில் கற்பித்தல் பணியில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பாடு....

 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாம் மாணவர்களை நேரடியாக அணுகி அவர்கள் கல்வி செழித்தோங்க அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தோம். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டது. பல மாணவர்களின் கல்வி முற்றிலும் முடங்கியது. செல்வ செழிப்புள்ளவர்கள் பல வழிகளில் என்னதான் இணைய வழியில் பல கருவிகள் கொண்டு கற்றாலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் கற்க வழியின்றி தம்மை வழிநடத்த தக்க துணை இன்றி இருந்த தருணத்தில் ஏதேனும் ஒரு மாற்று வழியில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்க என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருந்த நேரத்தில், கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் திரு.ஆ.கார்த்திக் ராஜா அவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோ என்னும் கல்வி வலையொலியை துவக்கினார். முதலில் ஒன்றிய, மாவட்ட அளவில் இருந்த கல்வி வலையொலி பின்னாளில் கற்பக விருட்சமென பரந்து விரிந்தது.


3. கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றலில் ஆன்லைன் கல்வி ரேடியோ பங்கு...

என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலரும் இந்த கல்வி வலையொலி மூலம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாடம் தொடர்பான ஆடியோக்களை கவனித்து, கல்வி ரேடியோ  தொடர்பான பல விளக்கங்களை பெற்றனர். இந்த கல்வி ரேடியோவின் சிறப்பம்சம் மாணவனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும், தீங்கிழைக்காத எங்கேயும், எப்பொழுதும், எக்கணமும், எல்லா நேரங்களிலும், திரும்ப திரும்ப செவி வழியே கேட்டு படிக்க முடியும். மேலும் இந்த கல்வி வலையொலியை சாதாரண கைபேசியிலும் கூட பயன்படுத்த முடியும். மேலும் இந்த கல்வி வலையொலிக்கு செலவிடப்படும் Data -வானது மிகவும் குறைவு. மேலும் இந்த கல்வி வலையொலி ஒரு Blog spot என்பதால்  எவ்விதமான விளம்பரங்களும் தோன்றாது. இந்த கல்வி வலையொலி மூலம் கொடிய நோய் தொற்று காலத்திலும், மாணவர்களுக்கு தலைசிறந்த கல்வியை அளிக்க முடியும்.


4. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் உங்கள் செயல்பாடுகள் பற்றி....

 இந்த இலட்சியப் பயணத்தில் என்னுடைய அனுபவம் இதன் செயல்பாடுகளை பற்றி அறிந்தவுடன் இந்த லட்சிய பயணத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள பேரார்வம் கொண்டேன்.  இந்த ஊக்கம் தான் என்னை இந்த பயணத்தில் சேர்த்தது. நான் உடனடியாக திரு.கார்த்திக் ராஜா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த லட்சிய பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இணைந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் மகிழ்வுடன் இசைவு தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி முதல் எனது 6,7,8 வகுப்புகளுக்கான ஆடியோக்களை அனுப்ப துவங்கினேன். ஆடியோக்கள் தயாரிக்க, தயாரிக்க ஆர்வம் கொப்பளித்தது. மேலும் மேலும் புத்தகப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பொதுவான பாடல்கள் பாடநூல் வாசிப்பு பயிற்சி,Points to remember, புத்தக பூங்கொத்து கதைகள், ஆத்திச்சூடி, விடுகதைகள், பழமொழிகள் மற்றும் இன்ன இன்ன பலவகையான கற்றல்களை கல்வி வலையொலிக்கு வழங்கி வருகிறேன். மொத்தம் 700 ஆடியோக்கள் தயார் செய்து அனுப்பியுள்ளேன்.


 பள்ளி தொடங்கிய பின் வகுப்பறை கற்றல்

கற்பித்தல் செயல்பாடுகளில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பாடு...

 Bluetooth speaker மூலம் மாணவர்களுக்கு ஆடியோ கேட்க செல்கிறோம். மேலும் பாடல்கள், திருக்குறள், பழமொழி பாட புத்தகப் பயிற்சி போன்றவற்றை மீண்டும் கேட்கச் செய்யலாம் இந்த புதுவிதமான கற்றல் கற்பித்தல் முறையினால், எந்த மாணவனும் செவி மூலம் நிறைவான கற்றலை அடைய முடியும். ஆசிரியர் இல்லாத வகுப்பறையிலும், ஒரு ஆசிரியரின் இடத்தை கல்வி ரேடியோ நிரப்புகிறது என்றால் அது மிகையாகாது.


5. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்கள் பங்கேற்று  தங்களது செயல்பாடுகளை பகிர்ந்தது பற்றி ...

எங்கள் பள்ளி மாணவர்கள் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற விழாக்களின் கல்வி ரேடியோவில், செயல்பாடுகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் மாணவர்கள் பெற்ற ஊக்கம், எங்கள் பள்ளி மாணவர்கள் அதிக அளவில், அதிக செயல்பாடுகளில் பங்கேற்று, பாராட்டு சான்றிதழ்,Trophies   பெற்றுள்ளனர். இவை அவர்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சி, ஊக்கம் ஏற்படுத்தியது.

 கல்வி அலுவலர் கருத்து...

 பொள்ளாச்சி மாவட்டம் கல்வி அலுவலர் அவர்களும், வடக்கு வட்டார கல்வி அலுவலர் அவர்களும், கல்வி ரேடியோ செயல்பாடுகளை பாராட்டி, ஊக்கம் அளித்து வருகின்றனர்.

 பெற்றோர் கருத்து....


 தங்கள் மாணவர்களின் கல்விக்கு கல்வி ரேடியோ மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வி ரேடியோ மூலம் கிடைக்கும் சான்றிதழ்கள், பாராட்டுக்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் தருவதாக கூறியுள்ளனர். என்றென்றும் நல்வாழ்த்துக்களுடன்

ஆ.ரா.தைலாம்பாள்.M.A. B.Ed பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்கு பாளையம், 

பொள்ளாச்சி வடக்கு கோயம்புத்தூர் மாவட்டம்.

No comments:

Post a Comment